அரசுடைமை ஆக்கப்பட்ட வேதா இல்லம் ! எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெ. தீபா மனு

வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ. தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து ஜெ. தீபா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம்  நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தது.நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்  அரசின்  நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .எனவே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 67,90,52,033 டெபாசிட் செய்தது.

இதனையடுத்து  நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு  அரசுடைமையானது என்று தமிழக அரசு அறிவித்தது. உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும்  நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது  என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தான் வேதா இல்லம்  நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிராக ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அவரது மனுவில்,அரசு செலுத்திய தொகையில் வருமான வரித்துறை நிலுவையை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வேதா இல்லத்தின் அசையும்   சொத்துக்களை பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் என்னையும் ,தீபக்கையும் சட்டப்பூர்வமான வாரிசு என்று அறிவிக்கப்பட்டதால் எங்களை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளார்.