கச்சத்தீவு பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இறக்கும் இலங்கை அரசு;தமிழக மீனவர்கள் கண்டனம்...!

Sri Lankan government unloads old buses into the sea in Kachchativu areas; Tamil Nadu fishermen condemned

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக,கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இலங்கை அரசு இறக்கி வருகிறது.

இதனால்,தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசு,மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளுக்குள், பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளை இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி,முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் ரோந்து மூலம்,தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் நாளையுடன் மீன்பிடி தடைகாலம் முடிவதால்,கடற்பகுதியில் இலங்கை அரசு பழைய பேருந்துகளை கடலுக்குள் போட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது எனவும்,மீன்களின் இனப்பெருக்கத்திற்கு என்று இலங்கை அரசு சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை எனவும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கச்சத்தீவு கடற்பகுதியில் பழைய பேருந்துகளை கடலில் இறக்குவதால்,அவற்றில் மீனவர்களின் வலைகள் சிக்கி சேதமடைவதுடன்,படகுகள் மோதும் ஆபத்தும் உள்ளதாக தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே கச்சத்தீவு கடற்பகுதியில் பழைய பேருந்துகளை இறக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிறுத்த மத்திய,மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.