விளையாட்டு, இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்..!

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.

அதில், தமிழ்நாடு ஆடவர் ஹாக்கி அணி கடந்த ஆண்டு நடந்த தேசிய ஹாக்கி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது. அந்த அணியின் வீரர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.27 லட்சத்தை முதலமைச்சர் அவர்கள் வழங்கி வீரர்களை கௌரவித்தாக கூறினார்.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் படிக்கும் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் முன்னாள் மாணவர் மாரிசறன் ஆகியோர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி விளையாடி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு காரணமாக  இருந்ததாகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இருவரையும் பாராட்டி இருவருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கியதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு விளையாட்டுகளில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறந்து விளங்குகின்றனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரில் சென்று சந்தித்து பாராட்டியும் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் பயிற்சியாளர்கள் நியமனம், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடைபட்டு இருந்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்ததும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு பயிற்சியாளர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து நடைபெற்ற மூன்று கட்டத்தேர்வில் எந்தவொரு முறைகேடும் நடக்காமல் வெளிப்படைத்தன்மையுடன்  76 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.