செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21ம் தேதி அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு, நேற்று காவேரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை வாதங்களுக்காக விசாரணையை வரும் ஜூன் 27ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்வதற்கு முன்னதாக அனுப்பிய சம்மனை அவர் பெறவில்லை. அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்தோம்.
ஜூன் 13ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி உடன் இருந்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது.
மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எனவே, வருங்காலத்தில் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறும் அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
