யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை,பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் ஆய்வு...!

Prime Minister Narendra Modi will personally inspect Odisha and West Bengal affected by Yas storm tomorrow

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை,பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே நேற்று ஒடிசாவின் பாலசோர் பகுதியில்,முழுவதுமாக கரையை கடந்து,மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்துள்ளது.

இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது,ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இதனையடுத்து,யாஸ் புயலால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இறந்தவர்களில் ஒடிசாவில் மூன்று பேர் மற்றும் ஒருவர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.

இதனைத் தொடர்ந்து,புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,”அதி தீவிரமாக வீசிய புயலால் குறைந்தது ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த யாஸ் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கம் மிகவும் நிலைக்குலைந்துள்ளது”,என்று கூறினார்.

இந்நிலையில்,யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.அதன்படி,பிரதமர் முதலில் புவனேஷ்வர் பகுதிக்கு சென்று,அங்கு அவர் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவார்,பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளான பாலசோர், பத்ராக் மற்றும் பூர்பா மெடினிபூர் ஆகிய இடங்களில் வான்வழி ஆய்வு மேற்கொள்வார் என்றும்,பின்னர்,மேற்கு வங்கத்தில் நடைபெறும் மறுஆய்வுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை,பிரதமர் நரேந்திர மோடி நாளை நேரில் ஆய்வு...!