திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 19ஆம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வந்திருந்தார்.அப்போது,அந்த பெண்ணை அருகில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று சிலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பெண் பழனி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.ஆனால்,அவர் கொடுத்த புகாரை வாங்க காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
அதன்பின்னர்,கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது மருத்துவர்களிடம் அவர் கூறுகையில் :”கடந்த 19 ஆம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு நான் கணவருடன் சென்றபோது கணவரை அடித்து விரட்டிவிட்டு என்னை தங்கும் விடுதிக்கு கடத்திச் சென்று மூன்று பேர் கொண்ட கும்பல் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது தொடர்பாக பழனி அடிவாரத்தில் உள்ள காவல் துறையிடம் புகார் அளிக்க முயன்றபோது அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்.இதனால், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பி விட்டேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ந்த மருத்துவர்கள் கண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில்,பழனி கோவிலுக்கு வந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:
“பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown node