இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் என்ற திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இந்த திட்டத்தை திரும்ப பெறுமாறு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் அக்னிபத் திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபாத் என்ற திட்டத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. முப்படைகளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறைகளைத் தகர்க்கும் அக்னிபாத் திட்டம் ஆபத்தானது. இந்தத் திட்டத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
சரியான பயிற்சி பெறாதவர்களை எப்படி பணியாற்ற அனுமதிக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது. 42 மாதங்களுக்கு மட்டும் பணியாற்ற அனுமதிப்பது பயிற்சித் திட்டத்தையே கேலிக்குரியதாக்குகிறது. அக்னிபாத் திட்டம் என்பது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ? என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் பொது முடக்க அறிவிப்பு வரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மோடி அரசு செயல்பட்டதால், இன்றைக்குக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான மத்திய அரசின் தொடர் தாக்குதலே இந்த அக்னிபாத் திட்டம். இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node