விளையும் பயிரை நாசப்படுத்துவது, தாயின் கருவை அழிப்பதற்கு சமம் – அன்புமணி

Will Tamilnadu go dark if NLC does not provide electricity? As Anbumani Ramadoss asked.

Anbumani Ramadoss

என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா? என அன்புமணி ராமதாஸ்  கேள்வி.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ள நிலையில்,  சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது.

என்எல்சி நிர்வாகத்தின்  நடவடிக்கைக்கு அரசியல்  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டு  வருகின்றனர். இந்த நிலையில், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போரட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை; என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை. இது நமது உரிமைக்கான பிரச்னை; விவசாய பட்ஜெட் ஒருபக்கம், ஒரு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது; நிச்சயம் இதனை விடமாட்டேன். விளையும் பயிரை நாசப்படுத்துவது, தாயின் கருவை அழிப்பதற்கு சமம்.

என்எல்சி 5 கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள்; என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா?; ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை. இபிஎஸ்-க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமாக நடந்த போராட்டகளம் வன்முறையாக மாறியது. அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்புமணி ராமதாஸை விடுவிக்க கோரி அவரது பாமக தொண்டர்கள் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தினர். சில போலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.