அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கு..! இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்...!

The special court will give its verdict today in the land grabbing case against Minister Ponmudi.

minister ponmudi

அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 1996-2001ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2003-ம் ஆண்டு புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அமைச்சர் பொன்முடி தமது மாமியார் பெயருக்கு பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு  பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பொன்முடி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 2007ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பின்னரே பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உள்பட மூன்று பேர் மரணம் அடைந்தனர். இதனால், பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.