144 தடையை மீறியதால் பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் மீது வழக்குப் பதிவு.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் 144 தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் குறித்து பேச்சு :
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மீது பாஜக மாநில பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மதன் திலாவர் தனது ஆதரவாளர்களுடன் கோட்டாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக குற்றம்சாட்டி திலாவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஹாவீர் நகர் காவல்நிலையத்தின் பிரதான வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
144 தடை மீறல் :
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த மாத தொடக்கத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திலாவர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.