#Breaking:மேகதாது அணை திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் -தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு...!

#Breaking: Petition in Tamil Nadu Supreme Court to cancel Mega Dadu Dam project report ...!

மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீட்டு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தாக்கல் செய்தது. ஆனால், போதிய தரவுகள் இல்லை என்று கூறி, இதனை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.இதற்கிடையில்,கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி உட்பட பிற அரசியல் கட்சிகள் தற்போது வரை எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து,காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,அம்மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த கரஜோல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முன்னதாக டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், தென்னிந்திய நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தாக்கல் செய்தது.

இதனால்,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில்,மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு அளித்த விரிவான திட்ட  அறிக்கையை ரத்து செய்ய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

மேலும்,இந்த திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும்,குறிப்பாக கர்நாடக அரசு வேறு ஏதேனும் அறிக்கை அளித்தாலும் அதை பரிசீலிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.