பாபர் மசூதி இடிப்பு தினம்:தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

Babri Masjid Demolition Day: Security intensifies in Tamil Nadu!

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியானது,இராமர் பிறந்த இடமாக கருதி கடந்த டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு அன்று இடிக்கப்பட்டது.இந்த அழிப்பினால் விளைந்த இந்து,இஸ்லாமியர்களிடையே மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.இதில், ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில்,பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இஸ்லாமியர்களால் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.இதனால்,நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக,தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,தமிழக விமான மற்றும் ரயில் நிலையங்கள்,பிரபலமான கோவில்கள், வணிக வளாகங்கள்,அரசு அலுவலங்கள்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,தமிழக எல்லை மற்றும் மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள்,ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.