"அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து,மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்" – கே.எஸ்.அழகிரி...!

All political parties should unite and teach a lesson to the Central BJP government" - KS Alagiri

மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்,அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது முதற்கொண்டு, முதல் அலையின் போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. அதனால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உற்றார் உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

மக்கள் இறப்பு:

முதல் அலையை எதிர்கொள்வதற்குத் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறியதால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தவறான தடுப்பூசி கொள்கை:

மத்திய பா.ஜ.க. அரசு தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய தடுப்பூசி போடுகிற மத்திய அரசின் இலக்கின்படி, 100 சதவிகிதம் தடுப்பூசியை 2024 இல் தான் போட்டு முடிக்க முடியும்.தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய பா.ஜ.க. அரசு முற்றிலும் தவறிவிட்டது.

இந்தியாவில் ஏன் சாதிக்க முடியவில்லை? :

நம்மைப் போல மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் இதுவரை 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீனாவில் சாத்தியமாகிற போது, இந்தியாவில் ஏன் சாதிக்க முடியவில்லை ?,உலக நாடுகளில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையில் இந்தியா 63-வது இடத்தில் தான் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.கடந்த ஏழாண்டுகால பா.ஜ.க. ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூபாய் 25 லட்சம் கோடி வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம்:

அதேநேரத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2021 ஆம் ஆண்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 7 கோடியே 50 லட்சம் பேர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவின் வலுவான 10 கோடி நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் முந்தைய 5 ஆண்டுகளில் அடைந்த பலனை இழந்துள்ளனர்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி,வேலை வாய்ப்பை பெருக்கவோ, பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ முற்றிலும் தவறிவிட்டார்.

மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்:

எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.