பள்ளிகளில் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

Education Minister Anbil Mahesh Poyamozhi has said that a special committee will be set up to investigate sexual harassment in schools.

பள்ளிகளில் நடக்கக்கூடிய பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தனி குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் எனவும், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள ஆசிரியரை கல்வி நிறுவனம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இந்த ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இனி ஆன்லைன் வகுப்புகள் பிரச்சினை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாலியல் புகார் விவகாரத்தின் மூலம் நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக தனி குழு அமைத்து பள்ளிகளில் பாலியல் புகார்கள் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழுவில் பெண் ஆசிரியர் ஒருவர் தலைமை வகிப்பார் எனவும், அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி உள்ளதா செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.