சென்னை : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கான லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வானிலை நிலவரம் குறித்த புதிய அறிவிப்பைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 16-ஆம் தேதியான இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் எஞ்சிய ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் ஜூன் 17 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

3 மாவட்டங்களுக்குக் கனமழை: இராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மற்ற பகுதிகள்: தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.