டெல்லி : "வாழ்க்கையில எப்போ என்ன நடக்கும்னு யாராலயும் கணிக்க முடியாது" என்ற வரிகளுக்கு இலக்கணமாக, டெல்லியில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்துள்ள நெஞ்சை உருக வைக்கும் நிஜக் கதை தற்பொழுது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அகந்தை மற்றும் போட்டி காரணமாகப் பிரிந்து, ஒருவரையொருவர் முகத்தைப் பார்க்கக்கூட விரும்பாத கணவனும் மனைவியும், இறுதியாக நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டு கண்ணீர் மல்க ஒன்று சேர்ந்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த ஷிகா சிங் மற்றும் சௌரப் ஆகிய இருவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஈகோ சண்டைகள் வெடித்தன.
சிறிய வாக்குவாதங்கள் பெரிய சண்டைகளாக மாற, இருவரும் பிரிந்தனர். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற மனைவி ஷிகா சிங், கணவர் சௌரப் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விவாகரத்து வரை சென்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியது.
தன் மகளின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று கவலைப்பட்ட ஷிகாவின் சீக்கியத் தந்தை, நீதிமன்ற வழக்குகளுக்காகத் தனது பெரும் பணத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தது. இது அந்தக் குடும்பத்தை மிக மோசமான நிதி நெருக்கடியில் தள்ளியது.
ஒருபுறம் பணத்தட்டுப்பாடு, மறுபுறம் தன் மகளின் எதிர்காலம் குறித்த கடுமையான மன உளைச்சல் எனப் பரிதவித்த அந்த தந்தை, திடீரென கடுமையான மாரடைப்பால் (Heart Attack) பாதிக்கப்பட்டார். கையில் ஒரு பைசா கூட இல்லாததால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த குடும்பத்தினர், அவரை ஒரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போதிய வசதிகள் இல்லாமல் அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
தனக்கு எதிராக வழக்குத் தொடுத்து, விவாகரத்து பெறக் காத்திருக்கும் தன் மாமனார் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் கணவர் சௌரப்பிற்குத் தெரியவந்தது. பொதுவாக இந்த நேரத்தில் பலரும் உதவி செய்ய நினைக்கமாட்டார்கள்.ஆனால் சௌரப் செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்குள் இருந்த அனைத்து கோபங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் அப்படியே தூக்கி எறிந்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அரசு மருத்துவமனையில் தன் மாமனார் இருந்த அந்தப் பரிதாபகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சௌரப், ஒரு நொடி கூட தாமதிக்காமல், தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து அவரை ஒரு கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி. அங்கிருந்த சிறந்த மருத்துவர்களிடம் பேசி, முன்னின்று உயர்தர சிகிச்சை அளித்து, தன் மாமனாரின் உயிரைக் காப்பாறியுள்ளார்.
இந்த மாபெரும் மனிதாபிமானமும், அன்பும் ஷிகாவின் மனதில் இருந்த கோபத்தையும், கசப்பையும் ஒட்டுமொத்தமாகக் கரைத்துவிட்டது. தங்களுக்குள் இருந்த பந்தம் எவ்வளவு வலிமையானது என்பதை இருவரும் உணர்ந்தனர்.
சமீபத்தில், இவர்களது விவாகரத்து வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. விவாகரத்து பத்திரங்களில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக, நீதிபதிக்கு முன்னாலேயே தங்களது விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதியினர், ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டு அழுதனர். பழைய சண்டைகளை மறந்து இனிவரும் காலங்களில் இறுதிவரை ஒன்றாக வாழ்வோம் என்று நீதிமன்ற சாட்சியாக அவர்கள் சத்தியம் செய்தனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே இந்தத் தம்பதியர் உணர்ச்சிப்பூர்வமாக அழுது ஒன்றுசேரும் காணொளி (Video) தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. "மக்கள் பிரிவதற்கு காரணங்களைத் தேடும் இந்தக் காலத்தில், அன்பால் எதையும் வெல்லலாம் என்பதை இந்தத் தம்பதியர் நிரூபித்துள்ளனர்" என இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.