சென்னை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபகாலமாக மின்வெட்டுப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, தலைநகர் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பல மணி நேரம் நீடிக்கும் இந்தத் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத் தூக்கம் கலைவதால் குழந்தைகள், முதியவர்கள் முதல் வேலைக்குச் செல்வோர் வரை பலரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக, ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல இடங்களில் நள்ளிரவிலேயே வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும் பொதுமக்கள் தங்களது பலத்த கண்டனங்களையும், ஆதங்கத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் நிலவும் மின்தடை குறித்துப் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, மின்வாரியத்தின் 'மின்தடை கண்காணிப்புக் குழு' நடத்திய தீவிர ஆய்வில் கண்டறியப்பட்ட 3 முக்கியக் காரணங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

சேதமடைந்த நிலத்தடி கேபிள்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் பணிகள் மற்றும் இதர சாலை தோண்டும் பணிகளின் போது, பூமிக்கு அடியில் இருக்கும் நிலத்தடி மின் கேபிள்கள் (Underground Cables) பல இடங்களில் அப்பட்டமாகச் சேதமடைந்துள்ளன. இதுவே திடீர் மின்தடைக்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால், வீடுகளில் ஏசி (AC) உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு நள்ளிரவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சென்னையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்சபட்ச மின்தேவையானது 5,014 மெகாவாட்டை (MW) கடந்துள்ளது. இந்த திடீர் தேவையால் மின்மாற்றிகளில் (Transformers) கூடுதல் சுமை ஏற்பட்டு மின்விநியோகம் தடைபடுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறை

நிலத்தடி கேபிள்களில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிந்து, அதனை உடனடியாகச் சரிசெய்வதற்குப் போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இல்லாததே பழுதுபார்ப்புப் பணிகளில் ஏற்படும் கால தாமதத்திற்கு முக்கியக் காரணம் என கூறப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகம்?

மின்வாரியத்தின் தரவுகளின்படி, சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு (Anna Salai), வேளச்சேரி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தான் கடந்த சில நாட்களாக மிக அதிக அளவிலான மின்தடைப் புகார்கள் பதிவாகியுள்ளன. பழுதடைந்த கேபிள்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.