இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, என்எல்சி நிறுவனத்திற்கு நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
பின் அன்று மாலையே அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்தித்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு விவசாயிகள் பாக்கள் நிற்காமல், கார்ப்பரேட்டுகளின் பக்கம் நிற்கின்றனர். பாமக நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது.
என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாதவர்கள்; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.
3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியதை முதல்வர் ஏன் எதிர்க்கவில்லை? தூத்துக்குடியை போல் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து என்.எல்.சி செயல்பட்டு கொள்ளட்டும். நெய்வேலியில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?