இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது.

உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் செய்தி பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலி மூலம் இணையத்தை பயன்படுத்தி ஆடியோ கால், வீடியோ கால், இணைய வாயிலாக குரூப்கள் மூலம் செய்திகள், புகைப்படங்கள், குறிப்பிட்ட அளவில் வீடியோகளையும் பரிமாறிக்கொள்ள முடியும்.

மேலும் இதில், பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மற்றொருவர் பார்க்க கூடாது என்ற வகையில் எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதியை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம். அந்த வசதியை எதிர்க்கும் வகையில் தான் அண்மையில் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தை வகுத்துள்ளது.

அதவது, மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021இன் படி, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும், இதனால், செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து தான், டெல்லி உயர்நீதிமன்றத்தில், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செயலிகள் தரப்பில் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதிடுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களிடம் எந்தவித ஆலோசனையும் இன்றி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் ஆகும்.

மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021இல் பிரிவு 14,19, 21 ஆகியவை தனிமனித உரிமைக்கு எதிரானவை. ஒருவேளை எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதியை மத்திய அரசு நீக்க கூறினால், தனிமனித பாதுகாப்புக்கு எதிராக இருக்கும் விதிமுறைக்காக நாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படும் என்று வாதிடபட்டது.

மத்திய அரசு சார்பில் வாதிடுகையில், இப்படியான பாதுகாப்பு சட்டங்கள் நாட்டில் அமல்படுத்தப்படவில்லை என்றால், நாட்டில் உலவும் போலி செய்திகளை கண்டறிய முடியாது  என வாதிடப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.