பகீர் கிளப்பும் கோவிஷீல்டு தடுப்பூசி.. திரும்பப் பெற்றது ஏன்?

உலகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு என்கிற  தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை உடன் இணைந்து கொரோனாவுக்கான “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில், இந்த தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

திரும்பப் பெற்றது ஏன்?

கொரோனா வைரஸின் “புதிய வேரியன்ட்களுக்கு புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால்”, தாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப்பெற்றுக்கொள்வதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், 2021 ஜூனுக்கு பிறகு ஆஸ்ட்ராஜெனகா தயாரித்த தடுப்பூசிகள் பயன்பாட்டிலிருந்து குறைக்கப்பட்டுவிட்டன.

மேலும், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றாலும், வெகு அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சி, இந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளை இனி பயன்படுத்தக்கூடாது என மே 7ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சந்தேகமும் அச்சமும்:

பயன்பாடு குறைந்ததால் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தாலும் மக்கள் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசிகள் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்ற நமக்கு தோன்றும் எண்ணத்தை தடுக்க முடியவில்லை.