டெம்போவில் பணமா.? பிரதமரின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதில்.!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 3 கட்ட தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதியன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் தெலுங்கானாவில் மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (புதன் கிழமை) தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சி பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராகுல் காந்தி, அதானி, அம்பானி ஆகியோரிடம் பணம் பெற்று உள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, முன்பு ரபேல் விவகாரம் பற்றி பேசிய ராகுல் காந்தி அது மங்கிப்போனதும், உடனடியாக அதானி, அம்பானியை குறிவைத்து பேச தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக அதானி, அம்பானி பற்றி பேசி வந்த பிரதமர் மோடி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவர்களை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்.

ஏனென்றால் அதானியிடம் இருந்தும், அம்பானியிடம் இருந்தும் டெம்போ வேன் மூலமாக பணம் பெறுகிறது காங்கிரஸ். ஐந்து வருடங்களாக அவர்களை விமர்சித்து வந்த காங்கிரஸ் தற்போது ஒரே இரவில் அதனை நிறுத்திவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று வீடியோ மூலம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி அவர்களே வணக்கம். நீங்கள் இப்போது பதட்டத்தில் இருக்கிறீர்களா.? வழக்கமாக பூட்டிய அறையில் தானே தான் அதானி, அம்பானி பெயரை சொல்வீர்கள்.? ஆனால் இப்போது பொதுவெளியில் அவர்கள் பெயரை கூற தொடங்கியுள்ளீர்கள்.

டெம்போ வேனில் காசு வருவதாக பேசி இருக்கிறீர்கள்.? அது உங்கள் சொந்த அனுபவமா.? முடிந்தால் அமலாக்கத்துறை (ED), CBIகளை ஏவி விசாரிக்க சொல்லுங்கள். உடனடியாக விசாரிக்க சொல்லுங்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் மீண்டும் உறுதியாக கூறுகிறேன். அதானி, அம்பானிக்கு மோடி எவ்வளவு பணம் கொடுத்து உள்ளாரோ அதே அளவில் மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மக்களை செல்வந்தர்கள் ஆக்குவேன். பாஜக வெறும் 22 பேரைதான் கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது .

ஆனால், காங்கிரஸ் கோடான கோடி மக்களை லட்சாதிபதிகளாக உருவாக்க போகிறேன் என ராகுல் காந்தி அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.