பரிதாபம்..தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை உயிரிழப்பு..!
ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கங்குவாரிசிகடம் மண்டலுக்கு உட்பட்ட மேட்டவலசா கிராமத்தில் தெருநாய் தாக்கியதில் பி.சாத்விகா என்ற 18 மாத சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை மாலை மேட்டவலசா கிராமத்தில் சாத்விகா என்ற சிறுமி தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது, அந்த கிராமப்பகுதிக்குள் நுழைந்த தெருநாய்கள் அந்த சிறுமியைத் தாக்கியுள்ளது. சாத்விகாவின் அலறல் சத்தம் கேட்டு சத்விகாவின் பெற்றோர் உடனடியாக விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பிறகு சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராஜம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாத்விகா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தெருநாய்கள் குழந்தையை பயங்கரமாக தாக்கியுள்ளது, அதனால் குழந்தையின் உடலில் நாய் கடித்த அடையாளங்கள் பலமாக பதிந்திருந்தன என்று தெரிவித்தனர்.
What's Your Reaction?