INDvBAN: 11 ஆண்டுகளுக்கு பிறகு... வங்கதேசத்திடம் வீழ்ந்த இந்தியா! நான் நின்றிருந்தால்.. சுப்மன் கில் வருத்தம்!

Sep 16, 2023 - 06:43
 0  1
INDvBAN: 11 ஆண்டுகளுக்கு பிறகு... வங்கதேசத்திடம் வீழ்ந்த இந்தியா! நான் நின்றிருந்தால்.. சுப்மன் கில் வருத்தம்!

16-ஆவது ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் முடிந்து, தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது.

இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக வங்கதேச அணியில் ஷாகிப் (80), தவ்ஹித் ஹ்ரிதோய் (54), நசும் அகமது(44) ஆகியோர் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 2, தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்பாக இப்போட்டியில் பாண்டியா, கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா, திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற வந்த சுப்மன் கில் 121 (133) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து அக்சர் படேல் 42 (34) ரன்களுக்கு விக்கெட்டை இழக்க இந்தியாவின் வெற்றி கேள்வி குறியானது. பின்னர் ஷர்தூல் தாகூரை தொடர்ந்து, முகமது ஷமி அவுட்டானதால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு, ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2012ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில், தனது இன்னிங்ஸை  சற்று நிதானமாக விளையாடியிருந்தால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். வங்கதேச அணிக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து பேசிய சுப்மன் கில், நான் விக்கெட்டை பறிகொடுக்காமல் களத்தில் நின்றிருந்தால், போட்டியை நிச்சயம் வென்றிருக்கலாம் என வருத்தம் தெரிவித்தார்..

நான் அவுட்டாகி வெளியே வந்ததும், ஒரு தவறான கணிப்பு என்று நினைத்தேன். நான் அவ்வளவு ஆக்ரோஷமாக இல்லாமல் கொஞ்சம் சாதாரணமாக பேட்டிங் செய்திருந்தால், நாங்கள் வெற்றி இலக்கை கடக்க முடிந்திருக்கும் என நினைத்தேன். இருப்பினும், இது ஒரு அனுபவம், சில சமயம் நீங்கள் சூழ்நிலையை தவறாக புரிந்து கொண்டு செயல்பட நேரிடும், நானும் அதையே செய்தேன். இதிலிருந்து நான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது எங்களுக்கு இறுதியானது அல்ல என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow