INDIA - CANADA : கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாது.! விசா தற்காலிக நிறுத்தம்.! இந்திய தூதரகம் அதிரடி நடவடிக்கை.!

Sep 21, 2023 - 07:03
 0  0
INDIA - CANADA : கனடாவில் இருந்து இந்தியா வரமுடியாது.! விசா தற்காலிக நிறுத்தம்.! இந்திய தூதரகம் அதிரடி நடவடிக்கை.!

கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் எனும் பிரிவினைவாதி கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொல்லப்பட்டார்.  இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் உயிரிழந்த விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து கனடா நாட்டில் இருந்த, இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை வெளியேறும்படி கனடா அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக இந்திய அரசாங்கமும், டெல்லியில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை அவர்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல உத்தரவிட்டது.

இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையே இம்மாதிரியான போக்கு நிலவி வந்த நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று அறிவிக்கையில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கனடாவில் நிலவி வருவதால் , கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  அங்குள்ள இந்திய மாணவர்களும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும் என  அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியது. கனடா நாட்டின் விண்ணப்பெக் பகுதியில் கொல்லப்பட்ட சுக்தூல் சிங் இந்திய அரசின் NIA அமைப்பால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது.

இப்படி தொடர்ந்து கனடா -இந்தியா நாடுகளின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நேரத்தில் இந்திய தூதரகம் அடுத்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாவை தற்காலிகமாக நிறுத்த சொல்லி கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த தடை மூலம் கனடா நாட்டில் இருந்து யாரும் இப்போதைக்கு இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow