ராஜ்பவனில் தக்காளியைப் பயன்படுத்த தற்காலிகத் தடை..! பஞ்சாப் ஆளுநர் உத்தரவு..!
கடந்த சில வாரங்களாக, தக்காளிகளின் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்து வருவதால், பஞ்சாப் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது குடும்பத்தலைவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பலர் தங்கள் வீடுகளில் தக்காளி உபயோகிப்பதை கூட நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜ்பவனில் தக்காளி சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் குடிமக்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாக ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தக்காளி தற்போது கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையாகி வருவதாகவும், வரும் நாட்களில் கிலோ ரூ.300ஐத் தொட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆளுநர் தரப்பில் வெளியான அறிக்கை ஒன்றில், ஒரு பொருளின் நுகர்வை நிறுத்துவது அல்லது குறைப்பது அதன் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தேவை குறைவது தானாகவே விலையை குறைக்கும். தற்போதைக்கு மக்கள் தங்கள் வீட்டில் மாற்று வழிகளைப் பயன்படுத்தி தக்காளி விலை உயர்வைக் குறைக்க உதவுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?