பதற்றம்...! பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு.!
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் நேற்றிரவு உயிரிழப்பு.
பஞ்சாப்: பதிண்டா ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
இந்த நிலையில், நேற்றிரவு தனது துப்பாக்கியை சரிபார்த்து கொண்டிருக்கும்பொழுது, தவறுதலாக குண்டு பாய்ந்து லகு ராஜ் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அதிகாலை இதே முகாமில், 4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வின் அதிர்ச்சி விலகாத நிலையில், இரவில் மேலும் ஒரு வீரர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தது பதற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
இருவர் தமிழர்:
இந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த லோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் ஆகிய 2 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை அல்லது இன்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் இல்லை:
இதற்கிடையில், இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலில்லை என பஞ்சாப் போலீசார் தகவல் அளித்துள்ளனர். ராணுவ முகாமில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக 28 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கி மாயமான நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், துப்பாக்கி மாயமான சம்பவத்தில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?