Annamalai: ராகுல் காந்திக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு தான் போட வேண்டும் - அண்ணாமலை விமர்சனம்

Sep 15, 2023 - 05:35
 0  2
Annamalai: ராகுல் காந்திக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு தான் போட வேண்டும் - அண்ணாமலை விமர்சனம்

2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் கடந்து 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.

இந்த நடைப்பயணத்தின்போது பல்வேறு பொதுக்கூட்டங்கள் பங்கேற்று பேசிய அண்ணாமலை, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட ‘என் மண் என் மக்கள்’  நடைபயணம் இம்மாதம் தொடக்கத்தில் தென்காசியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான என் மண் என் மக்கள் பாதயாத்திரை நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து X தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது, என் மண் என் மக்கள் சேர, சோழ, பாண்டியர்களின் எல்லையாக விளங்கிய திண்டுக்கல் மாநகரில் பிரதமரின் நல்லாட்சிக்குச் சாட்சியாக, பெருந்திரளெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. மாங்காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு உள்ளிட்ட பல்வேறு வகையாகத் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டுக்கு 2019ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது நமது மத்திய அரசு.

திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஆள் உயரம் கொண்ட பூட்டு திண்டுக்கல் பூட்டு என்பது நமக்கெல்லாம் பெருமை. கடவுளுக்கே பூட்டு போட்டு பாதுகாப்பு தேவையா என்று திமுககாரர்கள் கேட்பார்கள். பாவம் செய்த திமுகவினரும் பரிகாரம் தேட கோவிலுக்கு வருவதால் தான் பூட்டு போட்டுப் பாதுகாக்க வேண்டியுள்ளது. திண்டுக்கல் மக்களின் கோரிக்கையை நமது ஆட்சியில் நிறைவேற்றுவோம். திப்புசுல்தான் காலத்தில் அழிக்கப்பட்ட திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்போம்.

திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முகவரியாக திண்டுக்கல் உள்ளது. திமுக என்பது குறுநில மன்னர்களுக்கான குடும்ப ஆட்சி. ஊருக்கு ஊர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் மற்றவர்கள் போஸ்டர் ஒட்டவேண்டும். திமுகவுக்கு தெரிந்தது, சாராயம் விற்போம், சனாதனத்தை ஒழிப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை விரட்டியடிப்போம். பிரதமர் மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் என்றுள்ளார். இதனிடையே, திண்டுக்கல்லில்  மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, உழைக்கும் வர்க்கம் அதிகமாக உள்ள ஊர் திண்டுக்கல். திண்டுக்கல் என்றால் பூட்டு என மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பூட்டு என்பது வார்த்தை இல்லை. அது நம்பிக்கை என்றார்.

வரும் வழியில் இரண்டு பூட்டுகளை கொடுத்தார்கள். ஒன்று திமுகவிற்கு போடும் பூட்டு. மற்றொன்று காங்கிரஸ்க்கு போடும் பூட்டு என விமர்சித்துள்ளார். இந்தியாவை பற்றி வெளிநாட்டில் தவறாக பேசும் ராகுல் காந்திக்கும், இந்து தர்மத்தை தவறாக பேசும் உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என தெரிவித்தார். கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்துள்ளார் பிரதமர் மோடி.

அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 70 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கான அரசியலாகத்தான் இருந்து வருகிறது. மூன்றாம் தலைமுறையாக திராவிட அரசியல் உள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மூன்று தலைமுறைகளை பார்த்துள்ளனர். எனவே ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். மாற்றம் வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow