விடைபெறும் வடகிழக்கு பருவமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஜனவரி 15ம் தேதியை ஒட்டி, தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதன்பின் வறண்ட வானிலையே தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாய்க்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும், அதன் பின்னர் ஜனவரி 15ம் தேதியை ஒட்டி வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.