தொடர் கொலை மிரட்டல்..! குண்டு துளைக்காத காரை வாங்கிய நடிகர் சல்மான்கான்..!

Apr 11, 2023 - 05:57
 0  1

பாலிவுட் நடிகர் சல்மான்கான் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் குண்டு துளைக்காத காரை வாங்கியுள்ளார்.

கொலை மிரட்டல் : 

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு கடந்த சில மாதங்களாக லாரன்ஸ் பிஷ்நோய் மற்றும் அவரது கும்பல்களிடம் இருந்து சல்மான் கானின் அலுவலகத்திற்கு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கடந்த ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, “நீங்கள் சித்து மூஸ் வாலாவைப் போல் கொல்லப்படுவீர்கள்” என்று மிரட்டும் வகையில் எழுதியிருந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரை சேர்ந்த தாகத் ராம் பிஷ்னோய் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.

குண்டு துளைக்காத கார் : 

அந்தவகையில், தற்பொழுது நடிகர் சல்மான் கான் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய, குண்டு துளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யூவி (Nissan Patrol SUV) காரை வாங்கியுள்ளார். நிசான் இந்தியா இந்த வகை எஸ்யூவியை இந்திய சந்தையில் இன்னமும் விற்கவில்லை என்றும் நடிகர் சல்மான் கான் இதை தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

அம்சங்கள் : 

நிசான் பேட்ரோல் எஸ்யூவி B6 அல்லது B7 அளவிலான பாதுகாப்போடு வரவுள்ளது. இந்த எஸ்யூவி 5.6 லிட்டர் வி8 (V8) இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது 405hp குதிரை ஆற்றலையும் 560Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் காரின் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow