அதிகரித்துக்கொண்டே போகும் கச்சா எண்ணெய் விலை..!

பல்வேறு பொருளாதார நிறுவனங்கள்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துக் கொண்டே செல்லும் நிலையில், எவ்வளவு வரை கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்பது குறித்து  கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 20% வரை கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 2014-க்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. உற்பத்தி குறைப்பு போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

ஈரானுடனான அமெரிக்காவின் அணு ஒப்பந்தம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 6.20 டாலர் வரை அதிகரிக்கும் என முதலீட்டு நிறுவனமான Goldman Sachs கடந்த வாரம் தெரிவித்திருந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த Morgan Stanley நிறுவனம் கச்சா எண்ணெய் விலை விரைவிலேயே 90 டாலர்களை எட்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், அந்நிறுவனம் கூறும் காரணம் உற்பத்தி குறைப்போ, ஈரான் அணு ஒப்பந்த ரத்தோ அல்ல. சர்வதேச கப்பல் போக்குவரத்து விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் 2020-க்குள் கச்சா எண்ணெய் விலையை 90 டாலர்களாக உயர்த்தும் என Morgan Stanley கூறியுள்ளது.

Bank of America Merrill Lynch நிறுவனம் வேறு மாதிரியான பார்வையை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியல் சூழல்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக அடுத்த ஆண்டிற்குள் 100 டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை 100 டாலருக்கு உயரும் என சவுதி அரேபியாவும் எதிர்நோக்கியுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 300 டாலர்களாக அதிகரிப்பது சாத்தியமானதே என்கிறார் எண்ணெய் வர்த்தக நிபுணரான பியரர் ஆண்ட்ரென்ட். எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் இது சாத்தியமே எனக்கூறியுள்ள இவர், உடனடியாக இல்லையென்றாலும், விரைவிலேயே 300 டாலர்களை கச்சா எண்ணெய் எட்டிவிடும் என்கிறார் பியரர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment