செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே முற்றுகை போராட்டம்!

தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் 49 நாட்களாக மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment