கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக உருக்கமாக பேசிய எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறும்போது, “கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை தோல்வி கண்டுவிட்டது. அங்கு ஜனநாயகமே வென்றது. மற்ற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை கடத்த பாஜக முயன்றது. ஆனால் ஜனநாயகத்திடம் தோல்வி கண்டது” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கூறும்போது, “பாவம் மிஸ்டர் எடியூரப்பா. பொம்மலாட்டக்காரர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பொம்மைகளும் கீழே விழுந்து உடைந்துவிட்டன” என்றார்.
ராகுல் பேட்டி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “கர்நாடகா விவகாரத்திலிருந்து பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாடம் கற்றுக்கொண்டன. ஊழலை ஊக்குவிக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ்-மஜத தலைவர்கள் செய்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்” என்றார்.
மம்தா பானர்ஜி:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேவகவுடாவுக்கும், அவரது மகன் குமாரசாமிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றார். – பிடிஐ