திருச்சியில் ராணுவ வீரர் தற்கொலை..!

திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவியை கைத்துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், அவர் இறந்துவிட்டதாகக் கருதி தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மனைவியும் உயிரிழந்தார்.

திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான ரஞ்சித்குமார், விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். திருச்சி ரயில்வேயில் பணியாற்றி வரும் அவரது மனைவி ரஜினிகுமாரிக்கும் ரஞ்சித்துக்கும் இடையே மாலை வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், தனது கைத்துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டதாகத் தெரிகிறது.

இதில் மூர்ச்சையாகிக் கிடந்த ரஜினிகுமாரி இறந்துவிட்டதாகக் கருதிய ரஞ்சித்குமார், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த கண்டோன்மெண்ட் காவல்துறையினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஜினிகுமாரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரஜினிகுமாரியும் நேற்று இரவு உயிரிழந்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment