ஊழியர்கள், பூசாரிகளுக்கு திருச்செந்தூர் கோவிலில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருகையை பதிவு செய்வதற்காக பயோமெட்ரிக் கருவி பொருத்த  உத்தரவிட்டுள்ளது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தொடர்பு இல்லாத பலர், பக்தர்களிடம் சாமி தரிசனத்திற்காக பணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனிக்குழு அமைக்கவும் மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு இம்மனுவை விசாரித்து தீர்ப்பளித்தது அதில், பக்தர்களை பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்தவும், ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் வருகைக்காக பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியை செயல்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிப்பு நடைபெறுகின்றனவா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் செயல்அலுவலர் ஆகியோர் வாரம் தோறும் ஆய்வு மேற்கொள்ளவும், சட்டபூர்வமாக நியமிக்கப்படாத பூசாரிகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து ஜூலை 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment