நாங்கள் ஏன் பாஜகவை விட்டு விலகினோம்.? அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆகியவைகளை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர். அதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாகவும், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

திடீரென நிகழ்ந்த அதிமுக – பாஜக கூட்டணி முடிவு குறித்து பல்வேறு கரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று அவர் பரபரப்பு தகவலை கூறினார். நாங்கள் ஏன் பாஜக உடன் இருந்த கூட்டணியை முடித்துக்கொண்டோம் என ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக விழா பொதுக்கூட்ட மேடையில் குறிப்பிட்டார்.

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு

அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தான், நாங்கள் அடுத்த பிரதமராக வருவதற்கும் பிரதமர் மோடிக்கு முழு தகுதி உண்டு என கூறினோம். அதேபோல. அடுத்த முதல்வராக வருவதற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு தகுதி உள்ளது என்றும் நாங்கள் கூறினோம்.

ஆனால் பாஜகவினர் அதனை ஏற்க மறுத்து, அடுத்த பிரதமராக வருவதற்கு நரேந்திர மோடிக்கு தகுதி உள்ளது. ஆனால், அடுத்து தமிழக முதல்வராக வருவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தான் தகுதி உள்ளது என கூறினர். பழனி முருகனுக்கு காவடி தூக்கலாம். நாங்கள் ஏன் அண்ணாமலைக்கு காவடி தூக்க வேண்டும்.? எங்கள் முன்னாடியே ‘நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க’ என்று அந்த கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். அப்போ நாங்கள் என்ன இழிச்சவாயனுகளா என கடுமையாக விமர்சித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

மேலும், இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை எழுந்ததால் தான் நாங்கள் தைரியமாக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இனி பாஜகவுடன் ஒட்டுமில்லை. உறவுமில்லை என்ற முடிவுக்கு வந்தோம் என்று அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசினார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் அதிமுகவினர் மட்டுமின்றி திமுகவினர் மத்தியிலும் பேசுபொருளாக எழுந்து கண்டனங்களை பெற்றது. அதனை அண்ணாமலை மறுத்தோ, வருத்தம் தெரிவித்தோ பேசவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இதுவும் ஒரு காரணமாகவே அப்போது பேசப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment