அனல் பரந்த விவாதம்… வெளிநடப்பு.! சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்.!

தமிழக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி திருப்பி அனுப்புவதும், கிடப்பில் போடுவதும் என தொடர்ச்சியாக செய்து வந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவு : 

இதனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, இது தொடர்பாக தமிழக ஆளுநரின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டார்.

சிறப்பு கூட்டத்தொடர் : 

இதனை அடுத்து அவசர அவசரமாக, தமிழக அரசு தாக்கல் செய்த 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அதனை அப்படியே ஆளுநருக்கு அனுப்புவதற்காக இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர்..? நடப்பவை என்ன.?

முதல்வர் உரை : 

இந்த தீர்மானம் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை ஆளுநர் பொறுப்பில் உள்ளவர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவர் அவமதிக்கிறார் என கூறினார்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களை, எந்த காரணமும் குறிப்பிடாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாக தெரிவித்து, அதனை திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல எனவும் விமர்சித்தார்.

சட்ட மசோதாக்கள் :

அதன்பிறகு சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவவேற்றிய தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா,  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா,  தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, சென்னை நிர்வாக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் 2 ஆம் திருத்த சட்ட மசோதா,  ஆகிய சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143 இன் கீழ் மறு ஆய்வு செய்திட இந்த மாமன்றம் தீர்மாணிக்கிறது என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

துணைவேந்தர்கள் விவகாரம்.! பாஜக எம்எல்ஏ, திமுக அமைச்சர்கள் காரசார விவாதம்.!

பாஜக வெளிநடப்பு : 

தமிழக முதல்வர் கொண்டு வந்த 10 தீர்மானங்கள் தொடர்பான தனிதீர்மானம் மீது திருப்தியில்லை அதனால் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்த்ரன் தெரிவித்த பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக வெளிநடப்பு : 

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு, பல்கலை. துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தனிதீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா நிறைவேற்றம் : 

அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்ற பெரும்பாலான உறுப்பினர்கள் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், ஆளுநர் திருப்பி அனுப்பிய தீர்மானங்கள் அனைத்தும் மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.