துணைவேந்தர்கள் விவகாரம்.! பாஜக எம்எல்ஏ, திமுக அமைச்சர்கள் காரசார விவாதம்.!

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கடந்த 13ஆம் தேதி திருப்பி அனுப்பி இருந்தார். அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்ப தனித்தீர்மானம் கொண்டு வர இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் முக்கிய மசோதாக்களில் ஒன்று துணை வேந்தர்களை அரசின் ஒப்புதலோடு நியமிப்பது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முதல்வர் கொண்டு வந்த துணைவேந்தர் தீர்மானம் உட்பட 10 தீர்மானங்கள் மீது உடன்பாடு இல்லை அதனால் ஆதரவு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்கிறோம் என கூறியிருந்தார்.

அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தில் ஆரம்பத்திலேயே மத்திய அரசையோ , ஆளுநரையோ குறைத்து பேச கூடாது என்பது தான். ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் பாஜக, ஆளுநர் ரவி என என நிதானமில்லாமல் பேசி வருகின்றனர். தீர்மானத்தை ஆதரிப்பது வேறு, எதிர்ப்பது வேறு. சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொதுக்கூட்ட தொடராக மாற்றிவிட கூடாது.

துணை வேந்தர்களை மாநில அரசு தன்னிச்சையாக நியமிக்க கூடாது. ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என 1998இல் தமிழக அரசே இதே சட்டமன்றத்தில் கூறியுள்ளது. என நயினார் நாகேந்திரன் பேசுகையில் அதற்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நியமிக்கையில் , மாநில அரசின் ஆலோசனையை பெற வேண்டும் என்று தான் கூறுகிறோம் என பதிலளித்தார்.

துணை வேந்தர் நியமனம் தொடர்பாக பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்,  துணை வேந்தர் நியமனமனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என கூறுகிறீர்க்ள், மேற்கு வாங்க மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக பிரதமர் மோடி தான் இருக்கிறார். குஜராத் முதல்வர் தான் அந்த மாநிலத்தில் சில பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக இருக்கிறார். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில அரசு பரிந்துரையின் பெயரில் தான் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படுகிறார என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழக முதல்வர் கொண்டு வந்த 10 தீர்மானங்கள் தொடர்பான தனிதீர்மானம் மீது திருப்தியில்லை அதனால் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை முதல்வர் நியமனம் செய்வது என்பது சட்டத்திற்கு எதிரானது. தற்போதுள்ள தமிழக சூழ்நிலையில் இந்த தீர்மானம் அவசியமில்லாதது.

கல்வி என்பது எமர்ஜென்சி காலத்திலேயே மத்திய மாநில அரசுகளை தாண்டி பொதுப்பட்டியலில் இணைந்து விட்டது. தமிழக உயர்கல்வியை மேம்படுத்த மத்திய அரசு தமிழகத்திற்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆளுநர் மற்றும் மத்திய அரசு பற்றி பேச கூடாது என கூறிவிட்டு, அவர்களை பேசவிட்டு வைகை பார்க்கிறார்கள். திமுக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. மின்கட்டணம், சொத்துவரி ஆகியவை உயர்ந்துள்ளது என பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.