#Breaking:முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு- ஓபிஎஸ் என்ன சொன்னார்?..!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,சென்னை,கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்திற்கு அதிமுக மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்,அதிமுக எம்.பி. தம்பிதுரை,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வருகை புரிந்தனர்.அவர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.அதே சமயம்,தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவர்களும் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையில்,அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில்,கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும்,ஈபிஎஸ் அவர்களுக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,தம்பிதுரை,செல்லூர் ராஜூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஒற்றை தலைமையாக ஓபிஎஸ் தான் வரவேண்டும் என ஒரு தரப்பினரும்,ஈபிஎஸ் தான் வரவேண்டும் என மறு தரப்பினரும் உறுதியாக உள்ள நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.எனினும், ஒற்றைத்தலைமை குறித்து பொதுக்குழுவில் தனித்தீர்மானம் கொண்டு வந்தால்,பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் தம்பிதுரையிடம்,ஓபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர்கள் தம்பித்துரை,செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் ஈபிஎஸ் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,எம்சி சம்பத்,நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருடன் ஈபிஎஸ் தனது இல்லத்தில் தற்போது மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில்,கட்சிக்கு ஓபிஎஸ் செய்த பணிகள்,அரசியல் பயணம் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு நாளிதழ்களில் விளம்பரமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Comment