#Breaking:”ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது” – வைத்திலிங்கம் திடீர் தகவல்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு  நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.மேலும்,முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவுக்கு உறுப்பினர்கள் ஆல்லாத 600 பேர் வந்திருந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: “பொதுமக்கள் மத்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு செல்வாக்கு கூடி விட்டது.முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவுக்கு போன மாவட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்கள், எல்லோருமே,கூட்டத்திற்கு முன்னதாக காலை 6 மணிக்கே உறுப்பினர் அல்லாத 600 பேரை முன் இருக்கையில் அமர வைத்துவிட்டார்கள்.அவர்கள் தான் கூச்சலிட்டனர்.மாறாக பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் ஓபிஎஸ் அவர்கள் குறித்து பேசவில்லை.

குறிப்பாக,ஒரு கட்சி கண்ணியம்,கட்டுப்பாடு இல்லாமல் ஜனநாயகத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை நடத்தினார்கள்.மேலும்,நீதிமன்றம் கூறிய அறிவுரையை கேட்காமல் தீர்மானம் கொண்டு வந்தது தவறு என்று கூறி நாங்கள் அன்று வெளிநடப்பு செய்தோம்.இந்த வேளையில், பொதுக்குழுவுக்கு போன உறுப்பினர்கள் மீண்டும் எங்கள் வசம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.எனவே,ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறாது”,என்று கூறினார்.

அதே சமயம்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் தொண்டர்கள் தற்போது ஈபிஎஸ் அவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரது ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் அட்டவணை இன்று இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகிய நிலையில்,சற்று முன்னதாக சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார் ஓபிஎஸ்.அப்போது ‘வருங்கால அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்’ என கோஷம் எழுப்பி தொண்டர்கள் வழியனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து,அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை  தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுத்தியதை அவர் தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment