#BREAKING : தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு…! பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் …!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தார்கள் என்றால், அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த ஆட்சியில், மருத்துவ படிப்புக்கான உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது தொழிற்கல்வி படிப்புகளுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேருவது குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.