5 இடங்களில் தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் சென்னையில் கைது!

இரவு நேரங்களில்  சென்னையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்,  காலை நேரத்தில் சென்னையில் 5 இடங்களில் தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்களை விரட்டிச்சென்று  ஆந்திராவில் வைத்து தனிப்படையினர் கைது  செய்துள்ளனர்

சென்னையில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இரவு நேரத்தில் இரண்டு ஷிப்டிகளில் களமிறங்கி குற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ட்ராமிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் காவல் துறையினரின் நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்ததோடு, வழிப்பறி கொள்ளையர்களும் கைதாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியது. இரவு நேரங்களில் காவல் துறையினர் கெடுபிடி இருந்ததால் காலை நேரத்தில் கைவரிசை காட்டியுள்ளனர்.

சென்னை மாங்காட்டை சேர்ந்த கவிதா ராயப்பேட்டை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். காலை ராயப்பேட்டையில் வைத்து இவரிடம் 9 சவரன் தாலி சரடை பறித்துள்ளனர். அதே போல புளியந்தோப்பு பகுதியில் 60 வயது (சுந்தரகாண்டம் என்ற) மூதாட்டியிடம் 13 சவரனும், அண்ணா நகரில் ஜெயா என்ற மூதாட்டியிடம் 9 சவரனும் பறித்தனர். பின்னர் புழலில் சுதர்சனம்மாள் என்ற 70 வயது மூதாட்டியிடம் 7சவரன் செயினும், மாதவரத்தில் குமாரி என்ர 70 வயது மூதாட்டியிடம் 6 சவரன் செயினும் கொள்ளையர்கள் பறித்தனர்.

அடுத்தடுத்து அரங்கேறிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என துரிதமாக செயல்பட்ட போலீசார் சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதிபடுத்தினர்

கொள்ளையர்கள் இறுதியாக புழலில் கொள்ளையடித்து விட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருப்பதை தெரிந்து கொண்டு, வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமந்த சின்ஹா தலைமையிலான தனிப்படை ஒன்று ஆந்திரா நோக்கி விரைந்தது. அதற்குள் உயர் அதிகாரிகள் சிலர் ஆந்திர காவல் துறையினரை தொடர்பு கொண்டு பேசி கொள்ளையர்கள் குறித்த விவரங்களை அனுப்பினர்.

இதையடுத்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைத்து கொள்ளையர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். விசாரணையில் சென்னையில் பிடிப்பட்டவர்கள் இருவரும் பல்வேறு வழிப்பறி, செயின்பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய ஈரானிய கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை காவல் துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்த ஈரானிய கொள்ளையர்களில் இருவர் சிக்கியுள்ளனர்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment