விருதுநகர் அருகே இரண்டு குழந்தைகளை வெட்டிக்கொன்று, தந்தை கழுத்தறுத்து தற்கொலை!

இரண்டு குழந்தைகளை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற  தந்தை, தானும் கழுத்தறுத்து  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியை சேர்ந்தவர்கள் அந்தோணி – முனீஸ்வரி தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்தோணி வீட்டில் அவரது, மகன், மகள் மற்றும் மனைவி ரத்தவெள்ளத்தில் கிடந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு குழந்தைகளும் பிணமாகவே மீட்கப்பட்டனர். உயிருருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவி முனீஸ்வரி சாத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தோணி தமது குழந்தைகள், மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து அந்தோணி தேடப்பட்டு வந்த நிலையில், அவர் கண்மாய் அருகே கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை காவல்துறையினர் மீட்பதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாகவே அந்தோணி இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், போலீசாரின் விசாரணையில் தான் உண்மைக் காரணம் தெரியவரும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment