நாளை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

நாளை நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்   வெளியிடப்பட உள்ளது.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. அதன்பின் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதேபோல்,அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு  கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டிருந்தன.

நாளை காலை 8.30 மணிக்கு இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்  அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment