தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது..?மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தது யார்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டத்தைக் கலைக்க தானியங்கி ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டது? எந்த சட்டம் இதை அனுமதிக்கிறது என்று வினவியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் மக்களுக்கு ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கேட்டுள்ள ஸ்டாலின், படுகாயங்களை தவிர்க்க ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குண்டுகளை ஏன் பயன்படுத்தவில்லை என்றும்கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய காவல்துறை டிஜிபி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தலைமைச் செயலாளருக்கான பங்கு குறித்து அவர் விளக்குவாரா? போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போதுமான காவல்துறையினர் ஏன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை உள்ளிட்ட கேள்விகளையும் அவர் தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளார்.

போராட்ட நிலைமை குறித்து காவல்துறைக்கோ, முதலமைச்சருக்கோ உளவுத்துறை முன்கூட்டியே விளக்கியதா? என வினவியுள்ள ஸ்டாலின், உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்து விட்டது எனக் கூறுவது சரியாக இருக்குமா? என்றும் கேட்டுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக மக்கள் போராடிய போதும், அவர்களை ஏன் சந்திக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

100 நாள் மக்கள் போராடிய போதும், இந்த காலகட்டத்தில் தமிழக அரசு பிரதிநிதிகள் மூலமாக போராட்டத்திற்கு தீர்வு காண ஏன் முன்வரவில்லை, தூத்துக்குடி மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனையை தணிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் வினா எழுப்பியுள்ளார். அப்பாவி தமிழ் மக்கள் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் இறுதி பொறுப்பு யாருடையது என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment