எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை அட்வைஸ்…!ஸ்கீம் என்றால் என்ன?

பாஜக தலைவர் தமிழிசை ஸ்கீம் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பற்றி தெரியாமல் ஒரு மணி நேரத்தில் ஆணையம் அமையுங்கள் என்றால் எப்படி? என  எதிர்க்கட்சிகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இது குறித்து  நேற்று (ஏப்ரல் 2) வெளியிட்ட அறிக்கை:

“இன்று(ஏப்ரல் 2) தமிழகத்தில் வேண்டுமென்றே தங்கள் சுய லாபத்திற்காக பல கட்சிகள், எந்த கட்சிகள் தங்கள் கையில் ஆட்சி அதிகாரமும், ஆட்சியில் கூட்டணி என்ற துருப்புச்சீட்டை கையில் இருந்தும் அதை காவிரியைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் செய்யாமல், ஆனால் இன்று நாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

காவிரித் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமில்லை, காவிரிக்காக போராடுகிறோம் என்ற பெயர் வந்தால் போதும், காவிரித் தண்ணீர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? எங்கள் பெயர் காப்பாற்றப்பட்டுள்ளது அங்கே போராட்டம், இங்கே போராட்டம், கடையடைப்பு, ரயில் மறியல் என்று போராட்டம் நடத்தப்பட்டால் போதுமானது என்ற ரீதியில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

காவிரிக்காக இவ்வளவு பேசும் திமுக 74-ல் ஏன் காவிரி உரிமைக்காக தமிழகம் உச்ச நீதி மன்றத்தில் போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது? 24-ல் இருந்து 74 வரை 50 ஆண்டு காலம் குழப்பமில்லாமல் நீர் பங்கிடப்பட்டு வந்தது. முதல் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக. இன்று கூட தெளிவாக உச்ச நீதிமன்றம் “ஸ்கீம்” என்று தான் சொன்னோம் என்கிறது. இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். ஆணையம் அமைத்து விட்டுப் போக வேண்டியது தானே என்கிறார்கள்.

ஆணையம் என்றல் அனைத்து மாநிலங்களும் அணைகள் மீது உள்ள தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும். அணையின் உரிமை, பராமரிப்பு எல்லாமே ஆணையத்திடம் சென்று விடும். மாநிலங்கள் அதற்கு உரிமை கொண்டாட முடியாது, ஆக அப்படி ஓர் முடிவை அறிவிக்க வேண்டுமென்றால் மத்திய அரசு தன்னிச்சையாக அதை அறிவிக்க முடியாது, மாநிலங்கள் தான் அணை உரிமையை ஓர் அமைப்பிடம் அளிக்க வேண்டுமென்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும்.

அதை தான் உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெளிவாகச் சொன்னது, அதனால் தான் உச்ச நீதிமன்றம் ஆணையம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தவில்லை. இப்போது “Scheme” அதாவது வழிகாட்டுக்குழு என்று தான் சொன்னோம் என்கிறார்கள். “Scheme” என்றால் தண்ணீர் பிரித்துக் கொடுக்கும் உரிமை அந்த குழுவிடம் இருக்கும் ஆனால் அணைகளின் உரிமை மாநிலங்களிடம் இருக்கும். இது தெரியாமல், புரியாமல் ஆணையம் அமைக்க வேண்டியதுதானே! ஒரு மணி நேரத்தில் அமைத்து விடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் பொதுமக்களுக்கு வைக்கும் வேண்டுகோள்:

திமுக உட்பட அத்தனைக் கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள், போராட்டங்கள், மக்களுக்கான இடையூறுகள் என்றும் தீர்வாகாது, மத்திய அரசு தங்கள் கடமையையும், நிலைப்பாட்டையும் தெளிவாக உணர்ந்திருக்கிறது, அதனால் தான் இதற்கு முந்தைய காலகட்டங்கள் போல் இல்லாமல் ஓர் நிரந்தர தீர்வு வர வேண்டும் என்பதற்காகத் தான் இன்று தெளிவுப்படுத்த கோரியும், கால அவகாசம் கேட்டும் மனு செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல “ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கேட்பது வாழ் உரிமையோடு விளையாடுவது என்கிறார் ஸ்டாலின், விளக்கம் கேட்பதே வாழ் உரிமையோடு விளையாடுவது என்றால் அதை அமைக்க விடாமல் தடுக்கும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸோடும், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகளோடும் கைகோத்துக் கொண்டிருக்கிறீர்களே இது என்ன பொய் வாழ் உரிமை போராட்டமா?

காவிரி ஆணையமோ, குழுவோ அது 4 மாநிலம் சம்பந்தப்பட்டது. ஆக தங்கள் கூட்டணியை வைத்து தமிழக உரிமைக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டு இங்கு காவிரியை மீட்கிறோம் என்று கபட நாடகம் ஆடுபவர்கள் பொய் முகத்திரை கிழியும். மத்திய அரசின் முயற்சியில் காவிரி பாயும்…

காவிரி உரிமை மத்திய அரசின் தெளிவான முயற்சியால் நிரந்தர தீர்ப்பை கொண்டு வரும் நாளில் மத்திய மோடி அரசு ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு கண்டதை போல, வரும்நாட்களில் தமிழகத்தில் காவிரியும் நிரந்தரமாக பாய்ந்தோட வழிவகைகளை காணும் என்பது உறுதி.

40 ஆண்டு காலமாக இவர்களால் கிடப்பில் போடப்பட்ட காவிரி பிரச்சினை மேலும் சில நாட்கள் அவகாசம் கிடைப்பதன் மூலமே ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும் என பாஜக அரசு எண்ணி செயல்படுகிறது என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள்.”இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment