எடுபடாமல் ஸ்தபதி முத்தையாவின் சிகிச்சை நாடகம் !ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது தஞ்சை நீதிமன்றம்!

தஞ்சை நீதிமன்றம் பழனி கோவில் உற்சவர் சிலை மோசடியில் கைது செய்யப்பட்ட தலைமை ஸ்தபதி முத்தையாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. உடல் நலக்குறைவு என நாடகாமாடியும் ஜாமீன் கிடைக்காத பின்னணி.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பழம்பெருமையும் மூலிகை சக்தியும் கொண்ட நவபாசான உற்சவர் சிலை உள்ளது. இதற்கு தினமும் 6 கால பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அந்த சிலை சேதம் அடைந்து விட்டதாக கூறி கடந்த 2004 ஆம் ஆண்டு புதிதாக ஐம்பொன் சிலை ஒன்றை செய்து நவபாசான சிலையை கடத்த முயற்சி நடந்ததாக தலைமை ஸ்தபதி முத்தையா, கோவிலின் தனி அதிகாரி கே.கே.ராஜா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

புதிதாக செய்த சிலையை ஆய்வு செய்தபோது பொட்டளவு கூட வெள்ளி கலக்கப்படவில்லை என்றும் முறையாக உலோகங்களை கொண்டு வடிவமைக்கபடாததால் சில வாரங்களிலேயே சிலை கறுத்து போனதாகவும் கூறப்படுகின்றது. சிலையை கோவிலில் உள்ள ஒரு இருட்டு அறையில் ஒதுக்கி வைத்து விட்டதாகவும், இதனால் அரசுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிலை செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கம் எவ்வளவு என்ற விபரங்கள் பராமரிக்கபடாமலும், கோவிலில் வைத்து சிலையை செய்ய வேண்டும் என்ற விதியை மீறி தலைமை ஸ்தபதி முத்தையா, கேளம்பாக்கத்தில் உள்ள தனது சொர்ணம் கலைக்கூடத்தில் வைத்து விதியை மீறி வடிமைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

பழமையும், விலைமதிக்க முடியாததுமான பழனி தண்டாயுதபாணி சுவாமியின் நவபாசன சிலையில் பல இடங்களில் சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் , அதனை வெளி நாட்டுக்கு கடத்தும் சதித்திட்டத்துடனேயே தலைமை ஸ்தபதி முத்தையாவும், கோவிலின் நிர்வாக அதிகாரி கே.கே.ராஜாவும் ஆகமக விதிகளுக்கு எதிராக புதிதாக சிலை செய்ததும் உறுதிப்படுத்தபட்டது.

இதையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையாவும், தனி அதிகாரி கே.கே.ராஜாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முத்தையா மனுதாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினரின் எதிர்ப்பால் ஜாமீன் மறுக்கப்பட்டது. உடனடியாக வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆனால் பழனி சிலை கடத்தல் முயற்சி வழக்கு தொடர்பான கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிபிசிஐடிக்கு வழங்க மறுத்து விட்டனர்.

இதற்கிடையே ஸ்தபதி முத்தையாவின் உடல் நிலையை சுட்டிக்காட்டி ஜாமீன் பெற்றுவிடலாம் என்ற திட்டத்துடன் சிபிசிஐடி போலீசார் அவரை திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். திட்டமிட்டபடியே தஞ்சை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஸ்தபதி முத்தையா தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

ஸ்தபதி முத்தையா சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாராயணன் ஆஜராகி வாதாடினார். இதுவரை 7 நாட்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்தபதி முத்தையா மற்றும் கே.கே.ராஜாவிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அவரை பிணையில் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், 31 பக்கங்கள் கொண்ட மனுவைத் தாக்கல் செய்தனர். சுமார் ஐந்தரை மணி நேரம் நடந்த விவதத்தின் இறுதியில் ஸ்தபதி முத்தையாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நக்கீரர் உத்தரவிட்டார்.

உடல் நிலை சரியில்லை என்று நாடகமாடி ஜாமீன் பெற்றுவிடலாம் என்ற ஸ்தபதி முத்தையாவின் கனவும் தவிடு பொடியானது. பழனி கோவில் சிலை கடத்தல் முயற்சி வழக்கின் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வழக்கு விசாரணையை மீண்டும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment