ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார்- அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

  • M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஆற்றுமணலுக்கான மதிப்பீடு கொடுத்துவிட்டு, M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை ‘ஊழல் நிர்வாகமாக’ மாற்றியுள்ள அமைச்சரும் அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் வேலுமணி கூறுகையில்,சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் முறையாக ஆன்லைன் மூலம் கோரப்படுகிறது.உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக அரசை குற்றம் சாட்டிவருகிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன்னை தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ள முடியும்.ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால் பொய் உண்மையாகும் என்ற ‘கோயப்பல்ஸ்’ த‌த்துவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.