சட்டப்பேரவை முன்பு காங். தர்ணா!முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா!

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்.  தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் சித்தராமையா தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அரசியலமைப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று  சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சற்று முன் :

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.

கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. தனிப்பெரும் கட்சியாக 104 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா கோரிக்கை வைத்தார். அதே போன்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் அதிகமாக மொத்தம் 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இரு தரப்பினரின் கோரிக்கை தொடர்பாக சட்ட வல்லுனர்களான சோலி சொராப்ஜி, முகுல் ரோகத்கி ஆகியோரிடம் ஆளுநர் வஜுபாய்வாலா கலந்து ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைக்கப் போகிறார் என்று மாலையில் இருந்தே சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இந்த நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க முன்வருமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் எடியூரப்பாவிற்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.மேலும்  எடியூரப்பா மட்டுமே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அமைச்சரவை பதவியேற்கும் என்றும் முரளிதர்ராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment