குட்கா விவகாரம்:எங்களுக்கு மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை! அமைச்சர் விஜயபாஸ்கர் !

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,பொதுவாழ்க்கையில் இருப்பவர்களை நோக்கி அவதூறுகள், குற்றச்சாட்டுகள் வருவது இயல்பு என்று தெரிவித்துள்ளார் மேலும் மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை என்று குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன என்றும் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

இதற்கு  முன் , சென்னை உயர்நீதிமன்றம் ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதித்ததாக கூறப்படும் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டு எம்.டி.எம் (MDM) பான் மசாலா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும், அந்நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சோதனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஆவணங்கள் கைபற்றப்பட்டதாகவும் மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று காலை 11 மணியளவில் தீர்ப்பளித்தது. குட்கா ஊழல் விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் லஞ்சம் பெற்று தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு அனுமதித்ததாக புகார் கூறப்படுவதால், சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு தகுதியான வழக்கு என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment