இதற்கெல்லாம் கேரண்டி தருவீர்களா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

MK Stalin: கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி, சில கேரண்டிகளை தருவாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி.

தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தேர்தலை முன்னிட்டு, பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நேற்று 6வது முறையாக தமிழகம் வந்தார். அதன்படி, நேற்று சென்னையில் பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பிரதமரின் வாகன பேரணி நடைபெற்றது. இன்று வேலூர், நீலகிரி தொகுதிகளில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

இந்த நிலையில், கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி, சில கேரண்டிகளை தருவாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வட்டமடிக்கிறார்.

குஜராத் மாடல், சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி வந்திருக்கிறார். எனவே, கேரண்டி கார்டுடன் வந்திருக்கும் பிரதமர் மோடி, இதற்கு கேரண்டி தருவாரா என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்படி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு, இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது, மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம், கல்விக் கடன்கள் ரத்து, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, 100 நாள் வேலை திட்ட  ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன், செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம் செய்வேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும். மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு தருவேன். ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம், வன்முறைகளை ஒடுக்குவேன். பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன். சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன். தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன், தாக்குதலை நிறுத்துவேன். ⁠அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன். வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு செய்வேன்.

தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன் என இதற்கெல்லாம் பிரதமர் மோடி கேரண்டி அளிக்கத் தயாரா? என கேள்வி எழுப்பிய முதல்வர், இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் ‘Made in BJP’ வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும் என விமர்சித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்